பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
05:06
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், உள்ள வைணவ தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். நேற்று இக்கோவிலில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலை கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கால சந்தி பூஜை, விஷ்வக் சேனர், ஆராதனம், புண்யாவதனம், கலச ஆவாஹனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. பின்பு அரங்கநாத பெருமாள் நீல நிற பட்டுடுத்தி, வெள்ளி சப்பரத்தில், மேள, தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு, அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஆஸ்தானம் எழுந்தருளினார். உச்ச கால பூஜை தொடர்ந்து, வேத பாராயணம் சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தரர்கள், கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.