பதிவு செய்த நாள்
11
ஜூலை
2024
05:07
கோவை; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே ஆனி உற்சவத்தையொட்டி, பாரம்பரியமான நாற்று நடவு விழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா இன்று நடைபெற்றது. பட்டீஸ்வரர் கோவிலுக்கு எதிரேயுள்ள நாற்றுநடவு வயலில், பட்டீஸ்வரரும், பச்சைநாயகி அம்மனும் உழவர்களாக வேடம் தரித்து, வயலில் இறங்கி நாற்று நட்டதாக பேரூர்ப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், உழவுத்தொழிலின் பெருமையை பறைசாற்ற ஆனிஉற்சவ நாற்று நடவு விழா கொண்டாடப்படுகிறது. ஆனிஉற்சவ நாற்று நடவுவிழா, தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்தில் வைக்கப்பட்டுள்ள, நெல் நாற்றுக்கு பூஜை செய்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, ஆனி உற்சவத்தையொட்டி, பாரம்பரியமான நாற்று நடவு விழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து நாளை நடராஜருக்கு அபிஷேகமும், ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடக்கும்.