பதிவு செய்த நாள்
24
செப்
2024
04:09
இயற்கையின் அதிசயங்களே அற்புதம். இதை யாராலும் யூகிக்க முடியாது. இயற்கை சூழலில் அமைந்துள்ள கேசவ நாதேஸ்வரா கோவில், பக்தர்களை ஈர்க்கிறது.
உடுப்பி, குந்தாபுராவின் கெராடி கிராமத்தில், மூடுகல்லு என்ற இடத்தில் கேசவ நாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பச்சை பசேல் என்ற மரம், செடி, கொடிகள் நிறைந்த இயற்கை எழில் நிறைந்த அடர்த்தியான கானகத்தின் நடுவே, தார் காணாத சாலை, மக்களின் நடமாட்டம் இல்லாத, வாகனங்கள் நெரிசல் இல்லாத அமைதியான சூழலில், இந்த குகைக்கோவில் அமைந்துள்ளது. கெராடி, அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள் உள்ள குக்கிராமமாகும். இத்தகைய அற்புதமான இடத்தில் கேசவ நாதேஸ்வரா குடி கொண்டுள்ளார். சுவாமியை தரிசனம் செய்வதே, அற்புதமான அனுபவம். குகைக்குள் 50 அடி விசாலமான இடத்தில் பரவியுள்ள தண்ணீர், அதில் துள்ளிக் குதிக்கும் பல வகையான மீன்கள், பாம்புகளை காணலாம். அர்ச்சகர் எந்த பயமும் இல்லாமல், தண்ணீரில் நடந்து சென்று தினமும் பூஜை செய்கிறார். புதிதாக வரும் பக்தர்களுக்கு, இச்சூழ்நிலை பயத்தை ஏற்படுத்தும். இங்குள்ள பாம்புகள், இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்தது இல்லை என, கோவிலில் பல ஆண்டுகளாக பூஜை செய்யும் அர்ச்சகர் கூறுகிறார்.
இருள் சூழ்ந்த குகைக்குள், கடவுளுக்கு ஏற்றி வைத்த விளக்கு வெளிச்சத்தை தவிர, வேறு வெளிச்சம் இல்லை. இந்த குகைக்குள் நீரில் நடந்து சென்று, நீரில் நின்றவாறு சுவாமியை தரிசனம் செய்யும்போது, மீன்கள் நம் கால்களை மொய்த்து கொள்ளும். இது புதிய அனுபவமாக இருக்கும். கேசவ நாதேஸ்வரர் கோவில், மிகவும் புராதனமானது. இந்த குகைக்குள் இருந்து, சிவபெருமான் காசியை சென்றடைந்ததாக ஐதீகம். ரிஷிகள், முனிவர்கள் பலரும் தவம் செய்ததற்கான அடையாளங்கள், குகையில் உள்ளன. பிரிட்டிஷ் அதிகாரியான கர்னல் லார்டு மெக்கிங் என்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குகை கோவிலுக்கு வந்தாராம்.
முன்னொரு காலத்தில், விவசாயி ஒருவரின் நிலத்தில், பயிர்களை விலங்குகள் நாசமாக்கின. இந்த விலங்கை பிடிப்பதற்காக, இரவு வேளையில் பயிரை காவல் காத்தார். அப்போது பசு ஒன்று அங்கு வந்தது. அதை விவசாயி விரட்டிச் சென்ற போது, அது குகைக்குள் நுழைந்தது. விவசாயியும் குகைக்குள் பசுவை தேடிச் சென்றார். நீண்ட துாரம் சென்றபோது பசு மாயமானது. இருள் அடைந்த குகைக்குள் சிக்கிய விவசாயி, வழி தெரியாமல் பரிதவிக்கிறார். அவர் தன்னை காப்பாற்றும்படி இறைவனை வேண்டுகிறார். அப்போது குகையின் வெளியில் இருந்து, ஒரு ஒளி வட்டம் பிரகாசிக்கிறது. இந்த ஒளியை பின் தொடர்ந்து, விவசாயி குகைக்குள் இருந்து வெளியே வருகிறார். கடவுளின் அருளால் வெளியே வந்த அவர், பசு மேய்ந்த நிலத்தை கடவுளுக்கு சமர்ப்பித்ததாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் எள் அமாவாசை நாளில், கேசவ நாதேஸ்வரர் கோவிலில் பூஜைகள் நடக்கும். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். கோவிலுக்கும், அதன் பக்கத்தில் உள்ள மேள்யா ஏரிக்கும் தொடர்புள்ளது.இந்த ஏரியில் பக்தர்கள் நீராடி சுவாமியை தரிசனம் செய்வர். ஆண்டு முழுதும் குகைக்குள் அதே அளவு நீர் இருப்பது சிறப்பு. மழைக்காலத்தில் ஓரளவு நீர் அதிகம் இருக்கும். மற்ற நாட்களில் ஒரு அடி மட்டுமே தண்ணீர் இருக்குமாம்.
வழி என்ன?; குந்தாபுராவில் இருந்து கொல்லுார் வழியாக கெராடி கிராமத்துக்கு சென்று, அங்கிருந்து மூடகல்லுவை அடையலாம். உடுப்பியில் இருந்து, ஹாலாடி வழியாக கெராடிக்கு வந்து, இங்கிருந்து மூடகல்லுவுக்கு செல்லலாம். தேவையான வாகன வசதி உள்ளது. - நமது நிருபர் -