பதிவு செய்த நாள்
21
அக்
2024
03:10
தொண்டாமுத்தூர்; கோட்டைக்காடு, முத்துவாளியம்மன் உடனமர் முட்டத்து நாகேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, கோட்டைக்காட்டில், பழமையான முத்துவாளியம்மன் உடனமர் முட்டத்து நாகேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில், ராகு, கேது திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில், கடந்த, 19ம் தேதி, மூத்த பிள்ளையார் வேள்வியுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது. இன்று காலை மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கள இசை காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, நான்காம் கால வேள்வி பூஜை, திருமஞ்சனாகுதி, 108 மூலிகை திரவியாகுதி, நாடி சந்தானம், பேரொளி வழிபாடு நடந்தது. காலை, 9:00 மணிக்கு, திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், விமான கோபுரங்களுக்கும், முட்டத்து நாகேசுவரர், முத்து வாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மங்கள வாத்தியங்கள் முழங்க, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.