பதிவு செய்த நாள்
22
அக்
2024
12:10
ஆண் நாகத்தை கொன்றதால், பெண் நாகம் பழிவாங்க துடித்தது. இதை சமாதானம் செய்ய நாகர் கோவில் கட்டி வழிபடுகின்றனர். ஹிந்து மதத்தில் நாகங்களுக்கு தெய்வீக இடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போதும் நாகங்களை பூஜித்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு சஷ்டியின் போதும், புற்றுக்கு பக்தியுடன் பால் ஊற்றி வணங்குகின்றனர். பாம்பு தனக்கு கெடுதல் செய்தவர்களை 12 ஆண்டுகள் காத்திருந்து பழிவாங்கும் என, பக்தர்கள் கருதுகின்றனர்.
நம்புவது கஷ்டம்; தமிழில் நீயா என்ற திரைப்படம் வந்தது. இதில் ஆண் நாகத்தை சிலர் கொன்று விடுவர். அவர்களை பெண் நாகம் கொன்று பழி தீர்க்கும். இது கற்பனை கதை. இதே போன்ற சம்பவம் ஹூப்பள்ளியில் நடந்துள்ளது. நம்புவது கஷ்டம் என்றாலும், உண்மையாக நடந்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, நாக பஞ்சமி கொண்டாடப்பட்டது. அதற்கு முந்தைய தினம், ஹூப்பள்ளி, கலகடகியின் குலகொப்பா கிராமத்தில் வசிக்கும் ஹனுமந்த ஜாதவ் என்பவரின் வீட்டின் பின்புறம் நாகப்பாம்பு காணப்பட்டது. பல நாட்களாக இதன் நடமாட்டம் இருந்ததால், பிள்ளைகளை கொத்தி விடும் என்ற பயத்தால், வீட்டினர் பாம்பை அடித்து கொன்றனர். அதன்பின் அவர்களுக்கு பிரச்னை ஆரம்பமானது. அதே நாளன்று மற்றொரு நாகப்பாம்பு, ஹனுமந்த ஜாதவின் 11 வயது மகளின் கண்களுக்கு தென்பட்டது. அக்கம், பக்கத்தில் வசிக்கும் சிறார்களின் கண்களுக்கும் தென்பட்டது. அந்த வீட்டை சுற்றி, சுற்றி வந்தது. எப்போது கடிக்குமோ என அஞ்சினர். ஆனால், பாம்பு சிறார்களின் கண்களுக்கு மட்டுமே தெரிந்ததே தவிர, பெரியவர்களுக்கு தென்படவில்லை.
தெய்வ சக்தி; கொல்லப்பட்ட பாம்பு ஆணாக இருக்கும்; அதனுடைய ஜோடி பாம்பு, ஹனுமந்த ஜாதவின் குடும்பத்தை பழிவாங்க வந்திருக்கும் என, கிராமத்தின் மூத்தவர்கள் கூறினர். அது மட்டுமின்றி இறந்த பாம்பை எரிக்க முயற்சித்தும் எரியவில்லையாம். எனவே, அது தெய்வ சக்தி கொண்ட பாம்பாக இருக்கலாம் என, கிராமத்தினர் நம்பினர். ஹனுமந்த ஜாதவ் குடும்பத்தினர், குழந்தைகளுடன் குக்கே சுப்ரமணியர் கோவிலுக்கு சென்று, நாக தோஷ நிவர்த்தி பூஜை செய்தனர். அப்போது கோவில் அர்ச்சகர், பாம்பு கொல்லப்பட்ட இடத்தில், நாகர் கோவில் கட்டும்படி ஆலோசனை கூறினர். அதன்படி கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கோவில் கட்டினர். அங்கு ஜோடி நாகர் கற்சிலையை பிரதிஷ்டை செய்து, பக்தியுடன் வழிபடுகின்றனர். சிறார்களின் கண்களுக்கு தென்பட்ட பாம்பு, கடவுளின் அவதாரம் என நம்புகின்றனர். கோவிலுக்கு பகதர்கள் பெருமளவில் வருகின்றனர். நாகரை தரிசனம் செய்து, பூஜை செய்கின்றனர். கோவிலுக்கு கோபுரம் எழுப்பி, பெரிதாக கட்டவும் கிராமத்தினர் முடிவு செய்து உள்ளனர். - நமது நிருபர் -