திருப்பரங்குன்றம் கோயிலில் சரியான எடையில் பஞ்சாமிர்தம் விற்பனை; கண்காணிக்க உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2024 03:10
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் துணை கமிஷனர் நடவடிக்கையால் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் நேற்று முதல் சரியான எடையில் விற்பனை செய்யப்படுகிறது. கோயிலில் ஒப்பந்ததாரர் மூலம் 500 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் டப்பா ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு பஞ்சாமிர்தம் டப்பாவின் எடை 400 கிராம் மட்டுமே இருந்ததாக புகார் வந்தது. பஞ்சாமிர்தம் விற்பனை நிறுத்தப்பட்டது.
இது சம்பந்தமாக அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணனுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து கோயில் துணை கமிஷனர் சூரியநாராயணன் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படும் டப்பாக்களை ஆய்வு மேற்கொண்டு விற்பனையாளர்களிடம் விசாரணை செய்தார். விற்பனையாளர்கள் கொடுத்த விளக்கத்தை ஏற்க மறுத்த துணை கமிஷனர், சரியான எடையில் விற்பனை செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களிடம் எச்சரித்தார். பின்பு துணை கமிஷனர், உள்துறை நிர்வாகத்தினரிடம், பஞ்சாமிர்தம் டப்பாவின் எடையை தினமும் பரிசோதிக்க வேண்டும். சரியான எடை உள்ளவற்றை மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். சோதனை செய்யப்படும் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பஞ்சாமிர்தம் அடங்கிய டப்பாவில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதிகள் குறிப்பிடப்பட வேண்டும். பஞ்சாமிர்த டப்பா மேல்பகுதியில் சீல் செய்யப்பட்டிருக்க வேண்டும். சரியான எடையை உறுதி செய்த பின்பு தான் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். இதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். நேற்று முதல் பஞ்சாமிர்தம் சரியான எடையில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.