கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. கடந்த, 1976ம் ஆண்டு டிச., 2ம் தேதி ஏகாதசி உற்சவத்தின் போது, கேசவன் என்கிற யானை நோய்வாய்ப்பட்டு இறந்தது. இதனைத் தொடர்ந்து உற்சவத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மறைந்த கேசவன் யானையின் உருவச் சிலை முன்பாக, கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகள், பார்த்தசாரதி கோவிலில் இருந்து கேசவன் படத்துடன் வீதி உலா வந்து நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். இன்று காலை 7:00 மணிக்கு இந்திரசென் என்ற யானை, கேசவன் யானையின் புகைப்படத்தை ஏந்தி செல்ல, 5 யானைகள் ஊர்வலமாக சென்று, கேசவன் யானையின் உருவச்சிலை முன் அணிவகுத்து, துதிக்கை உயர்த்தி வணங்கின. யானைகளுக்கு மூலிகை சாப்பாடு, பழ வகைகள், கரும்பு, சர்க்கரை, அவில் ஆகியவை வழங்கப்பட்டன. குருவாயூரில் நாளை (11ம் தேதி) ஏகாதசி உற்சவம் வெகு விமர்சியாக நடக்க உள்ளது. ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, கோவில் முன்பாக உள்ள மேல்ப்புத்தூர் கலையரங்கில் நடக்கும், செம்பை சங்கீத உற்சவத்தில், இன்று காலை, 9:00 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர். செம்பை சங்கீத உற்சவம், நாளை நிறைவடைகிறது.