பதிவு செய்த நாள்
17
பிப்
2025
12:02
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவில் உற்சவ விழாவில், பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்கினர்.
பொள்ளாச்சி அருகே, பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில் உற்சவ விழா கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பொங்கல் பூஜை, கங்கையில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த, 15ல், குண்டம் திறப்பு, தேர் நிலையில் இருந்து, விநாயகர் கோவில் முன் நிறுத்தப்பட்டது. பொன்னாலம்மன் மலைக்கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், பூவோடு எடுத்து, அம்மன் தேர் குண்டம் வந்தடைதல், பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, திருக்கல்யாணம், கங்கையில் இருந்து சக்தி கும்பம் கொண்டு வருதல், காலை, 8:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும், பெண்கள் குண்டத்தில் மலர் துாவி வணங்கினர்.அதன்பின், தேரோட்டம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தலும், அன்னதானமும் நடந்தது. நாளை, 18ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு தேர் கோவிலை வந்தடைதல், மாலை, 6:00 மணிக்கும் கம்பம் இறக்குதல் மற்றும் அபிஷேக பூஜை நடக்கிறது.