பதிவு செய்த நாள்
05
மார்
2025
03:03
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை மாசி மகத் தேர்த்திருவிழா, கொடியேற்றம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலம் காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசி மகத் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று இரவு கிராம சாந்தி பூஜை நடக்கிறது. நாளை காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 7ம் தேதி இரவு சிம்ம வாகனம், 8ம் தேதி அனுமந்த வாகனம், 9ம் தேதி கருட சேவை ஆகிய வாகனங்களில் அரங்கநாத பெருமாள் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. பத்தாம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 11ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது. 12ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், தேரோட்டமும் நடைபெற உள்ளது. 13ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 14ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும், 15ம் தேதி சந்தான சேவை, சாற்றுமுறை பூர்த்தியும், 16ம் தேதி வசந்தமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் செயல் அலுவலர் பேபி ஷாலினி ஆகியோர் செய்து வருகின்றனர்.