பதிவு செய்த நாள்
10
மார்
2025
12:03
கோவை; சரவணம்பட்டியில் உள்ள கரட்டுமேட்டில், ரத்தினகிரி குமரக்கடவுள் முருகனுக்கு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று நடந்தது.
கடந்த வியாழனன்று கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. நான்கு நாட்கள் வேள்விகள் நடந்தன. மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சியுடன் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விழா துவங்கியது. பங்கேற்றவர்கள் காவடி எடுத்து பாடி வந்து, ஆறாம் கால வேள்வியில் பங்கேற்றனர். காலை 5:30 மணிக்கு பாதவிநாயகர், இடும்பன், கடம்பன், கன்னிமார், வன்னீஸ்வரர், நாகசக்தி அம்மன், திரிசூலம், நுழைவு வாயில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு ரத்தினகிரி குமரக்கடவுள், மருதாசலக்கடவுளுக்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், மருதாசல அடிகள், சிவஞானபாலய சுவாமிகள், பாலமுருகனடிமை சுவாமிகள், முத்து சிவராமசாமி அடிகள் உள்ளிட்டோர், திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தினர். பெருந்திரு மஞ்சனம், அலங்கார பூஜை, பதின்மங்கல காட்சி, பேரொளி வழிபாடு, மந்திர திருநீறு பிரசாதம் வழங்குதல் மதியம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருவீதி உலா, பள்ளியறை வழிபாடுகள் நடந்தன. நாள் முழுவதும் அன்ன தானம் நடந்தது. திருக்குட நன்னீராட்டு வேள்வி வழிபாடுகளை, சிரவையாதின அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை, திருக்கோவில் பரிபாலன சபை, அறங்காவலர் குழு, இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.