பதிவு செய்த நாள்
19
மார்
2025
12:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பல்லவ உத்சவம் ஏழு நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான உத்சவம் இன்று துவங்கியது.
உத்சவத்தையொட்டி, நேற்று, மாலை 6:30 மணிக்கு சேனை முதன்மையார் திருமலைக்கு எழுந்தருளினார். அங்கு சேனை முதன்மையாருக்கு சிறப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து திருமலையில் இருந்து, சேனை முதன்மையார் நம்மாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளினார். அங்கு திருவாராதனம், நிவேதனம், நம்மாழ்வாருக்கு சிறப்பு மரியாதை நடந்தது. பல்லவ உத்சவத்தின் முதல் நாளான இன்று, காலை 10:00 மணிக்கு ப்ரணதார்த்தி ஹர வரதர், பெருமாள், திருமலையில் இருந்து நுாற்றுக் கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு பரிமளம் கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சாற்றப்பட்டு, நிவேதனம், தீர்த்தம் சடாரி, திரை சேர்த்தல் நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு திரை திறத்தல், பஞ்சாங்க படமும், மாலை 6:30 மணிக்கு பெருமாள், திருவாராதனம், நிவேதனம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு ப்ரணதார்த்தி ஹர வரதர், நுாற்றுக்கால் மண்டபத்தில் இருந்து கண்ணாடி அறைக்கு எழுந்தருள்கிறார். இரவு 7.30 மணிக்கு படியேற்றமும், தொடந்து பெருமாள் திருவடி கோவில் புறப்பாடும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பெருமாள் கோவிலில் உள்ள கண்ணாடி அறைக்கு செல்கிறார்.