பதிவு செய்த நாள்
08
டிச
2012
11:12
கிராமத்தின் மண்வாசனை இன்றளவும் உயிர்பித்து ஏதோ ஒரு கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நம்மில், இயந்திர மயமான உலகில் எத்தனை பேர் திரும்பி பார்க்கின்றோம். நாகரீக உலகில் கிராம சிந்தனைகளை தொலைத்து, நகரத்தில் தேடுகிறோம். வாருங்கள் புதிருக்கு நேரமில்லை, திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, இயற்கை வளத்திற்கு மட்டுமல்ல பண்டைய கால மரபுகளுக்கும் பஞ்சமில்லா கிராமம்.மூன்றாண்டுக்கு ஒரு முறை முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் விழா மூன்று தினம் நடக்கும். இதில், முதல் நாள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேர்த்திக்கடனாக வயல்வெளியில் உள்ள சேறுகளை (சேத்தாண்டி வேடம்) உடல் முழுமையும் பூசி, பல வண்ண சாயங்களை உறவு முறை பாராட்டி ஒருவருக்கொருவர் ஆடிப்பாடி மகிழ்வர். பகுதியை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்வர். நாகரீக உலகில், சேறு என்பது அலர்ஜி. ஆனால், இங்கோ சிறார் முதல் வயோதிர் வரை மகிழ்ச்சி.
அப்படி என்ன இதில் இருக்கிறது. அணுகினோம் கிராம பட்டக்காரர் மங்களகாந்தி மற்றும் கிராம கோயில் நிர்வாகி இளங்கோவனிடம்.. சேறு பூசிக்கொள்வதால்,உடலில் தீய சக்திகள் அணுகாது என்பது மரபு. மேலும் உடலில் வளர்சிதை மாற்றங்களை தூண்டி உடல் ஆரோக்கியம் பெறும். தோல் சம்மந்தபட்ட நோய்களை அறவே குணப்படுத்தும் ஆற்றல் சேறு பூசி கொள்வதால் நிகழ்வதாக, கூறினர். சீனாவில் மண் மருத்துவ முறை பிரபலமாக உள்ளது நினைவு கூற தகுந்தது. மண்ணுக்கு வாசனை மட்டுமல்ல அதற்கு மருத்துவ குணம் இருப்பதற்கு இதுவே சான்றாகும். தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் இதுபோன்ற பயனுள்ள விழாக்கள் கிராமங்களில் மட்டும் துடித்து கொண்டிருக்கிறது.