பதிவு செய்த நாள்
27
மார்
2025
10:03
திருப்பதி; அன்னமாச்சார்யா இசை மேதை, ஏழுமலையான் பக்தர். தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்தவர்,32,000 கீர்த்தனைகளை இயற்றியவர். சமஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) படைத்துள்ளார். இதில் ‘வெங்கடேஸ்வர சதகம்’ என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் படைத்த ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ ஆகியவை தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன. தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரும் பிரபலமான ‘சுபத்ரா கல்யாணம்’ என்ற நூலை எழுதியவருமான திம்மக்கா இவரது மனைவி. இவர்களது மகன் திருமாலாச்சாரியார், பேரன் சின்னய்யா ஆகியோரும்கூட, தென்னிந்திய சங்கீத வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அன்னமய்யா’ என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பல தெலுங்கு திரைப்படங்களில் இவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தின் முக்கிய சின்னமாகப் போற்றப்படுபவரும், கவிஞர், அறிஞர், ஆச்சார்யா, அன்னமய்யா என்றெல்லாம் போற்றப்படுபவருமான அன்னமாச்சார்யா 95-வது வயதில் (1503) மறைந்தார்.
அவரது 522 வது பிறந்த நாள் திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 6 மணி முதல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் மற்றும் பஜனை மண்டல கலைஞர்கள் அன்னமாச்சாரியாரின் "சப்தகிரி சங்கீர்த்தன கோஸ்திகானம்" நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், மெட்லபூஜை நடைபெற்றது. மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி உத்யானவனத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஏற்பாடு செய்த சப்தகிரி சங்கீர்த்தனங்களால் சப்தகிரிவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அஹோபில மடத்தின் 46வது பீடாதிபதி ஸ்ரீமன் ஸ்ரீவன் சதகோப ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிஜி, ஆசி வழங்கி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், TTD கூடுதல் EO ஸ்ரீ சி.எச். வெங்கையா சவுத்ரி சுவாமிக்கு ஸ்ரீவாரி பிரசாதம் வழங்கினார். முன்னதாக, துவாதசி மற்றும் சப்தகிரி சங்கீர்த்தன குழு பாடலின் ஒரு பகுதியாக, கலைஞர்கள் “துவாதசி நீடு..., பாவமுலோனா போன்ற பாடல்களை பாடினர்.