பதிவு செய்த நாள்
07
ஏப்
2025
05:04
அரியலூர்; அரியலூர் அருகே பிரசித்திபெற்ற சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியம் பெருமாள் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம்,திருமழபாடி கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் சிவாலயங்களில் மிகவும் பழமையானது, காசிக்கு நிகராக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் கொள்ளிடம் ஆற்றின் அருகே அமையப் பெற்றதாகும். இக்கோவில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப் பெற்றும். வசிஷ்டர், அகஸ்தியர் ஆகிய முனிவர்களால் பூஜிக்க பெற்றதுமாகும். இக்கோவிலில் நந்தியெம் பெருமாள் திருக்கல்யாண விழா வருடந்தோறும் பங்குனி மாதம் நடைபெறும்.நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் நடைபெறும் என்ற ஐதீகத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருக்கல்யாணத்தை காண வருடம் தோறும் வந்து செல்கின்றனர். விழாவில் முன்னதாக திருவையாறு அய்யாரப்பர் கோவில் இருந்து வசிஷ்ட முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியார் பல்லகில் பெண் அழைப்பாக கொண்டுவரபட்டார். பின் அதனை தொடர்ந்து சுந்தராம்பிகை மற்றும் வைத்தியநாத சுவாமிகள் ஒரு பல்லக்கிலும், நந்தியெம் பெருமாள் மற்றும் சுயசாம்பிகை மற்றொரு பல்லக்கிலும் கோவிலை சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம்வந்து மக்களுக்கு அருள் பாவித்து கோவிலின் முன்பு இருந்த திருமண மேடைக்கு வந்தடைந்தது.
அதனையடுத்து அங்கு சுயசாம்பிகை தேவியாருக்கும்,நந்தியெம் பெருமாளுக்கும் எண்ணெய், மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்களால் மணமக்களாக அலங்கரித்தனர். பின் அதனை தொடர்ந்து வேத வித்வான்கள் யாகபூஜை உடன் வேத மந்திரங்கள் ஓத நாதஸ்வர இன்னிசையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியார் கழுத்தில் மணமகன் நந்தியம்பெருமான் தாலி கட்ட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மணமக்களுக்கு சிறப்பு தீபாரணை காட்டப்பட்டு ஊஞ்சலில் அமர்த்தப்பட்டனர். அங்கு ஊஞ்சலில் ஆடியபடியே சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாவித்தனர். அதனைத் தொடர்ந்து சுயசாம்பிகை மற்றும் நந்தியம் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் ஏற்றப்பட்டு திருமண கோலத்தில் கோவிலைச் சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். இதில் வீடுகள் தோறும் பக்தர்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.