சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் வைகாசித் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2025 11:06
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மே 22 ல் கோயில் உற்சவ விநாயகர் கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளி காணிக்கை பெற்றார். பத்து நாட்கள் விநாயகருக்கு அங்கேயே அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணிக்கு காணிக்கை பணத்துடன் விநாயகர் மீண்டும் கோயில் திரும்பியதைத் தொடர்ந்து திருவிழா தொடங்கியது. மதியம் 1:35 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 1:45 மணிக்கு பிடாரியம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 2:15 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனார் சன்னதி முன்பாக உள்ள பிரதான கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது. சிவாச்சாரியார்கள் பாரம்பரிய முறைப்படி ஏடு படித்து ஐயனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டினர். 10 நாள் மண்டகபடியாக தினமும் பகல், இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. ஜூன் 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூரணை, புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஜுன் 6 ம் தேதி கழுவன் விரட்டு திருவிழா, ஜூன் 9ஆம் தேதி தேரோட்டம், ஜூன் 10ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தார்கள், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.