பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
02:06
‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உள்ளது. பூலோக வைகுண்டம் என்று குறிப்பிடப்படும் இந்த கோவிலுக்கு வளமான வரலாறும் உள்ளது. இதனால் கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.
பெங்களூரிலும் ஒரு குருவாயூரப்பா கோவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் உள்ளது நெட்டிகெரே கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 80 அடி சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில். கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் கேரள கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறைக்குள் குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணர் சிலை போன்று அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.
கோவிலை சுற்றி மரம், செடி, கொடிகளை வளர்த்துள்ளனர். இது கோவிலின் அழகை மேம்படுத்துகிறது. கோவிலை ஒட்டி சிறிய ஆறு ஓடுகிறது. பக்தர்களுக்கு கோவிலின் அமைப்பு அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது. கேரளாவில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் வேஷ்டியும், பெண் பக்தர்கள் சேலை, சுடிதாரும் அணிந்து வர அனுமதி உண்டு. ஆண்கள் வேஷ்டி எடுத்து செல்லாவிட்டால் கோவில் நிர்வாகமே வேஷ்டி வழங்குகிறது.
ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்தால் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. கோவிலின் நடை தினமும் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்து இருக்கும். சிறிய கோவிலாக இருந்தாலும் நன்கு பராமரித்து உள்ளனர். பெங்களூரு நகரில் இருந்து இந்தக் கோவில் 60 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. கே. ஆர்., மார்க்கெட்டில் கனகபுராவுக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. மெஜஸ்டிக்கில் இருந்தும் கனகபுராவுக்கு பி.எம்.டி.சி., பஸ் சேவை உள்ளது. நெட்டிகெரே கிராசில் இறங்கி கோவிலை சென்றடையலாம்.
மெட்ரோ ரயிலில் செல்வோர் சில்க் இன்ஸ்டிடியூட் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை சென்றடையலாம். கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. மேலும் தகவலுக்கு 95915 00653 என்ற மொபைல் நம்பரை தொடர்பு கொள்ளலாம்