பதிவு செய்த நாள்
14
ஜூன்
2025
03:06
கூடலூர்; கூடலூரில், நள்ளிரவில் மலர்ந்த நிஷாகாந்தி பூக்களுக்கு, குடும்பத்தார் கற்பூரம் ஏந்தி நினைத்த காரியம் கைகூட வணங்கினர்.
பிரம்ம கமலம் என, அழைக்கப்படும் நிஷாகாந்தி பூக்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில், ஒரு இரவில் மலர்ந்து, சூரிய உதயத்திற்கு முன் வாடிவிடும். பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள இந்த செடிகளை கூடலூர் பகுதியில் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். தற்போது இந்த செடிகளில், நள்ளிரவில் வெண்மை வண்ணத்தில் பூக்கும் பூக்களும், அதிலிருந்து வீசும் தெய்வீக நறுமணமும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. கூடலூர் சேர்ந்த தாசில்தார் சித்துராஜ் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் செடியில் இருந்து நேற்று முன்தினம், நள்ளிரவு பூக்கள் மலர்ந்தது. குடும்பத்தார், கண்விழித்து, நினைத்த காரியம் கைகூட பூக்களுக்கு கற்பூரம் ஏற்றி வணங்கினர். இதன் வாசம் அப்பகுதி முழுவதும் வீசியது. மக்கள் கூறுகையில், நள்ளிரவில் பூக்கும் இந்த செடியிலிருந்து வரும் வாசனை சந்தனமும், பன்னீரும் கலந்த தெய்வீக நருமணம் போன்று இருக்கும். இதனை வீட்டில் வளர்த்தால் நேர்மறை ஆற்றல், வெற்றி, மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்தப் பூக்களை வேண்டி வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்றனர்.
தாவர ஆய்வாளர்கள் கூறுகையில்; கள்ளிச்செடி இனத்தைச் சேர்ந்த இவைகள், அதிக அளவில் ஆக்சிஜனை வெளிப்படுத்துகிறது. அழிந்து வரும் பலர் இனங்களில், இதனையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாத்து வளர்ப்பது அவசியம் என்றனர்.