கேரள மாநிலம், சபரிமலை, மாளிகை புறத்தம்மன் கோவிலின் இடதுபுற மேற்பகுதியில், நவக்கிரஹ மண்டபம் அமைந்திருந்தது. ‘இந்த மண்டபத்தை அப்புறப்படுத்தி, வசதியான மற்றொரு இடத்தில் கோவில் கட்ட வேண்டும்’ என தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதையடுத்து, மாளிகை புறத்தம்மன் கோவிலின் இடதுபுறம் புதிய கோவில் கட்டப்பட்டு, நேற்று காலை 10:50 மணிக்கு கும்பாபிஷேக பூஜை துவங்கியது. நவக்கிரஹ சிலைகளை பூஜாரிகள் சுமந்து, மாளிகை புறத்தம்மன் கோவிலை வலம் வந்த பின், நவக்கிரஹ கோவிலில் வைக்கப்பட்டன. அங்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட கலசங்களை பூஜாரிகள் எடுத்து, கோபுரத்தின் மேற்பகுதிக்கு கொண்டு செல்ல, அந்த புனித நீரை, தந்திரி, கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி தீபாராதனை நடத்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நவக்கிரஹ பிரதிஷ்டை முடிந்து, நேற்றிரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆடி மாத பூஜைகளுக்காக, வரும் 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.