பதிவு செய்த நாள்
21
டிச
2012
10:12
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி, வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்க இருப்பதை முன்னிட்டு, விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி, வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம், அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைய துறை மேற்கொண்டு வருகிறது.
வி.ஐ.பி., பாஸ் இல்லை: பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இந்த ஆண்டு முதன் முறையாக, முக்கிய பிரமுகர்களுக்கு, தனியாக வி.ஐ.பி., பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரே வகையில் மொத்தமாக வழங்கப்படும், இந்த அட்டைகள், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதால், இந்தாண்டு, "பேட்ஜ் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது முக்கிய பிரமுகர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, பதவி மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்ட, "பேட்ஜ் வழங்கப்படும். பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக, இத்தகைய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தெரிவித்துள்ளது.
கட்டணமில்லா தரிசனம்: வழக்கம் போல, ஊடக துறையினருக்கு மட்டும், "சிறப்பு பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல, "கட்டணமில்லா தரிசன முறையும் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. முதலில் வரும் 1,000 பக்தர்கள், கட்டணமில்லாமல் தரிசிக்கலாம். இதை தொடர்ந்து, பகலில் தரிசன கட்டணமாக, 100 ரூபாய் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பரமபத வாசல் தரிசனம், மூலவர் தரிசனம் என்று தனி தனியாகவும், இரண்டும் ஒன்றாகவும் பக்தர்கள் விரும்பியவாறு தரிசனம் செய்யலாம்.
வசதிகள்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில் இலவசமாக லட்டு மற்றும் பிரசாதம், கோவில் வழிகளை விளக்க தகவல் மையம், மருத்துவ முதலுதவி, தீயணைப்பு, குடிநீர், பேருந்து வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், பெரிய திரை அமைக்கப்பட்டு, வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், கோவிலுக்குள், கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.