கடவுளின் அருள் பெறாத, எந்த சாம்ராஜ்யங்களும் இருக்க முடியாது. கதம்பர்களுக்கு மதுகேஸ்வரர், விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு விருபாக்ஷா குலதெய்வமாக விளங்குகின்றனர். அதே போன்று யது வம்சத்தினருக்கு, சோமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். மைசூரின் யது வம்சத்து மன்னர் யதுராயா, தன் சகோதரர் கிருஷ்ண ராயரை அழைத்து கொண்டு, வெகு தொலைவில் உள்ள, தங்களின் குலதெய்வமான செலுவ நாராயணரை தரிசிக்க புறப்படுகிறார். வழியில் கோடி சோமேஸ்வரர் ஆலயம் முன்பாக படுத்து ஓய்வெடுக்கின்றனர்.
அப்போது அவர்களின் கனவில் தோன்றிய சோமேஸ்வரர், கார்காளி மாரநாயகா என்ற கயவன், 16 சமஸ்தானத்தை சேர்ந்த செலுவ ராஜம்மணிக்கு தொல்லை தருவதாக கூறி, அக்கயவனை அழிக்கும்படி உத்தரவிடுகிறார். அதன்படி சகோதரர்கள் யதுராயா, கிருஷ்ண ராயர், கார்காளி மாரநாயகாவை கொன்று, செலுவ ராஜம்மணியை காப்பாற்றுகின்றனர். இதற்கு நன்றி பாராட்டும் நோக்கில், செலுவராஜம்மணி, தன் மகள் கெம்ப செலுவராஜம்மணியை யதுராயருக்கு திருமணம் செய்து வைக்கிறார். அன்று முதல் சோமேஸ்வரரை, யது வம்சத்தினர் குலதெய்வமாக வழிபட துவங்கினர்.
ஒவ்வொரு முறை யுத்தத்துக்கு செல்லும் போதும், மைசூரு மன்னர்கள் சோமேஸ்வரருக்கு பூஜை செய்து வணங்கிய பின்னரே புறப்படுவர். மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள, யது வம்சத்தினர் வழிபடும் சோமேஸ்வரர் கோவில், 13வது நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு பார்வதி, சோமசுந்தரி சன்னிதியை காணலாம். யது வம்சத்தினர் இப்போதும், சோமேஸ்வரரை பக்தியுடன் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் தசரா நேரத்தில், ஆயுத பூஜை நாளன்று ஆயுதங்களை வைத்து பூஜிப்பது வழக்கம். கோவிலில் நாகர் கற்கள், சிவலிங்கம் உள்ளன.
அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணியர், சோமேஸ்வரரை தரிசிக்கின்றனர். திருமண தடை உள்ளவர்கள், தம்பதிக்கிடையே மனஸ்தாபம் உள்ளவர்கள், சோமேஸ்வரரை வணங்கினால், பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.