திருப்பூர் மாவட்டத்தில் 1008 இடங்களில் கோ பூஜை; ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்
பதிவு செய்த நாள்
30
அக் 2025 11:10
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மற்றும் நகர் பகுதியில், 1,008 இடங்களில் கோ பூஜை சிறப்பாக நடந்தது. தென் தமிழகம் கோ சேவா சமிதி, திருப்பூர் மாவட்டம் சார்பில், பாரம்பரியமான நாட்டு பசுக்களை கொண்டு கோ பூஜை மாதந்தோறும் நடத்தி வருகின்றனர். அஷ்டமி திதியில் கோபாஷ்டமி விழாவை கொண்டாடும் வகையில், கோ சேவா சமிதியினர் திருப்பூர் மாநகரம் உட்பட, 693 இடங்கள் உட்பட கோட்டம் முழுதும், ஆயிரத்து, 8 இடங்களில் பாரம்பரியமான நாட்டு இன பசுக்களை வைத்து கோ பூஜை விழா நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். கோ சேவா சமிதியினர் கூறியதாவது: பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வின் வளர்ப்பு தந்தை ஸ்ரீ நந்தர், பிருந்தாவனத்தில் பசுக்களின் கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை குழந்தை கிருஷ்ணர் வசம் ஒப்படைத்திருந்தார். அப்போது, கிருஷ்ணருக்கு, ஐந்து வயது பூர்த்தியாகும் போது, மேய்ச்சல் நிலங்களுக்கு தனது சகோதரர் பலராமனுடன் பசுக்களை முதன் முதலில் மேய்ச்சலுக்கு அனுப்பும் நிகழ்வை, ஒரு விழாவாக கொண்டாடினர். அந்த நாளே, கோபாஷ்டமி. இதை வடமாநில முழுவதும் கொண்டாடப்படும் விழா, கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாட திருப்பூரில், நான்காம் ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. வீடு, தோட்டம், கோவில் என, 693 இடங்களில் நாட்டு பசுக்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். பெருமாநல்லுாரில், 120, செஞ்சேரி பகுதி – 160, பல்லடம் – 90, அவிநாசி – 72, பொங்கலுார் – 85, ஊத்துக்குளி – 90, திருப்பூர் மாநகர் – 55 மற்றும் பல்லடம் நகர் – 21 என, 693, தாராபுரத்தில், 180, கரூர் ஜில்லா, 145 என, ஆயிரத்து, 18 இடங்களில் நடந்தது. ஏராளமானோர் கோ பூஜையில் பங்கேற்றனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
|