திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி தன்னெழுச்சியாக வீடுகளில் விளக்கேற்றும் பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2025 10:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றக்கோரி தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் நேற்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் முருகன் கொடி கட்டியும், வாசலில் முருகன் பெரும்ன் போட்டோ வைத்து, விளக்கேற்றியும் வழிபாடு செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தீப தூணில் தீபம் ஏற்ற அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் பாம்பன் நகர், கருமாரியம்மன் கோவில் தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பாலாஜி தெரு, வெள்ளி மலை தெரு, ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் தங்களது வீடுகளின்முன்பு முருக்கப்பெருமானின் படத்துடன் கூடிய சேவற் கொடியை கட்டி, விளக்குகளில் தீபம் ஏற்றி கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னெழுச்சியாக தங்களது வீடுகளின்முன்பு சேவல் கொடிகள் கட்டியும், வாசலில் முருகப்பெருமான் போட்டோ வைத்தும் விளக்கேற்றினர். பெண்கள் கூறுகையில், எங்கள் முருகப்பெருமானுக்கு சொந்தமான மலையில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். எங்களது பன்னெடுங்கால கோரிக்கை இது. தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர். நூறு ஆண்டுகளுக்குப் பின்பு இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை கண்டு தரிசிக்கலாம் என மகிழ்ச்சியுடன் காத்திருந்தோம். ஆனால் தடை செய்யப்பட்டு விட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்து விரைவில் தீப தூணில் தீபம் ஏற்ற முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும். தீப தூணில் தீபம் ஏற்றும் வரை தினம் வீடுகளில் பித்தளை குத்து விளக்குகள் மற்றும் அகல் விளக்குகளில் விளக்கேற்றி வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது எங்களது பாரம்பரிய கலாச்சார பெருமை என்றனர்.