பதிவு செய்த நாள்
15
டிச
2025
05:12
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத உற்ஸவங்கள் டிசம்பர் 20ல் பகல் பத்து உற்ஸவத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 30ல் நடக்கிறது. அன்று முதல் ராப்பத்து உற்ஸவம் துவக்கமும், 2026 ஜனவரி 8 முதல் 15 வரை மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவமும் நடக்கிறது.
பகல் பத்து உற்சவம்; டிசம்பர் 20 முதல் துவங்கி 29 முடிய பகல்பத்து உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 20 அன்று மாலை, வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளி பச்சை பரத்தலை பார்வையிடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையடுத்து தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம், கோஷ்டி, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சொர்க்கவாசல் திறப்பு; மார்கழி மாத முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா டிசம்பர் 30 காலை 5:30 மணிக்கு நடக்கிறது. அப்போது பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து வரவேற்று மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களா சாசனம், பக்தி உலாவுதல், திருவாராதனம், அரையர்சேவை, சேவா காலம் நடக்கிறது.
ராப்பத்து உற்சவம்; டிசம்பர் 30 முதல் 2026 ஜனவரி 9 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் சுற்றி வந்து பெரிய பெருமாள் சன்னதியில் எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம், அரையர் சேவை, பஞ்சாங்கம் வாசித்தல், பொது ஜன சேவையும், மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானம் சேர்தலும் நடக்கிறது.
எண்ணெய்காப்பு உற்ஸவம்: 2026 ஜனவரி 8 முதல் 15 வரை எண்ணெய்காப்பு உற்ஸவங்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு கோயிலில் இருந்து ஆண்டாள் புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி வந்து எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 3:00 மணிக்கு மேல் எண்ணெய்காப்பு உற்ஸவங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்துள்ளனர்.