சபரிமலையில் டிச., 27ல் மண்டல பூஜை : தங்க அங்கி நாளை புறப்படுகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2025 05:12
சபரிமலை; சபரிமலையில் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி நாளை ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் கடந்த நவம்பர் 17-ம் தேதி அதிகாலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் நிறைவாக வரும் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 10:10க்கும் 11:30 க்கும் இடைப்பட்ட முகூர்த்தத்தில் மண்டல பூஜை நடைபெறும் என்றும் அதை தொடர்ந்து தீபாராதனை நடைபெறும் என்றும் தந்திரி மகேஷ் மோகனரரு கூறியுள்ளார். ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து இந்த பூஜை நடைபெறும். இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நாளை அதிகாலை தங்க அங்கி பவனி புறப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் பவனியாக வந்த பின்னர், 26 - ம் தேதி மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடையும். இங்கிருந்து தலைசுமடாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டு அன்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்கிரகத்தில் அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்தத் தங்க அங்கி மறைந்த திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியதாகும். 27 - ம் தேதி மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மகர விளக்கு கால பூஜைகளுக்காக 30- ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.