சபரிமலையில் மகர ஜோதி நாளில் 900 பஸ்கள் : போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2026 02:01
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் பம்பையில் இருந்து 900 அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் கூறியுள்ளார்.
மகரஜோதி முன்னேற்பாடுகள் தொடர்பாக பம்பையில் நேற்று உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: நடப்பு சீசனில் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். சிறப்பான முறையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சர்வீஸ்களை நடத்தியது. நடப்பு சீசனில் ஒரு விபத்து கூட நடைபெறவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். விபத்துகளே இல்லாமல் இருக்க அடுத்த சீசனில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும். மகரஜோதி நாளில் பபையிலிருந்து 900 பஸ்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 100 பஸ்கள் தயார் நிலையில் பக்கத்து மாவட்ட டிப்போக்களில் நிறுத்தப்பட்டிருக்கும். பம்பை ஹில்டாப் பார்க்கிங்கில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப பம்பை பஸ் ஸ்டாண்டுக்கு அந்த பஸ்கள் வரவழைக்கப்படும். பொதுவாக இந்த சீசனில் புகார்கள் குறைவு என்பது நிம்மதியை தந்துள்ளது .தேவசம் போர்டும் அரசும் இணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததால் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.