மூணாறு; சத்திரத்தில் ஐய்யப்ப பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் கை எளிமை படுத்தும் வகையில் வண்டிபெரியாறில் டோக்கன் வழங்கப்படுகிறது.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம், புல்மேடு காட்டு பாதையில் சபரிமலைக்கு செல்லலாம். இந்த வழியை பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக சத்திரத்தில் ஸ்பாட் புக்கிங் நடக்கிறது. தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்ததால் ஸ்பாட் புக்கிங் கை எளிமை படுத்தும் வகையில் வண்டிபெரியாறில் போலீசார் சார்பில் டோக்கன் வழங்கப்படுகிறது. வண்டிபெரியாறு அருகே ஹாரிசன் மலையாளம் கம்பெனியின் வாளார்டி எஸ்டேட் வாகனங்கள் நிறுத்தும் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெரிசல்: வண்டிபெரியாறில் மினி ஸ்டேடியத்தில் கடந்த சபரிமலை சீசன் வரை பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டதால் இந்த சீசனில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. அதனால் ஊராட்சி நிர்வாகத்தின் தலையிட்டால் ஹாரிசன் மலையாளம் கம்பெனி நிர்வாகம் வாளார்டி எஸ்டேட்டில் ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு மைதானம் வசதி செய்து கொடுத்தது. எனினும் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தாமல் ரோட்டோரங்களில் நிறுத்தி வருகின்றனர். அதனால் வண்டிபெரியாறில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. அதனை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தை பக்தர்கள் பயன்படுத்துமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.