சுவாமிமலையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவக்கம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 12:01
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோவிலாகும். தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதது இத்தலம். அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலம் ஆகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் கொடிமரம் அருகே சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடனும், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மங்களவாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினர். இதையடுத்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 31 ஆம் தேதி நாளான ராதரோகணமும், பிப். 1ம் தேதி தைப்பூசம் அன்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.