அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 01:02
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் 50வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை கணபதி பூஜை உடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு முதல் கால அபிஷேக ஆராதனை நடந்தது. கொங்கு பண்பாட்டு மையம் சார்பில், பெருஞ்சலங்கை ஆட்டம் இரண்டு மணி நேரம் நடந்தது. நாட்டுப்புறப் பாடல்களுடன் நேர்த்தியாக ஆடி பக்தர்களை கவர்ந்தனர். ஆசிரியர் செந்தில்குமார் வழிபாடு பற்றி தகவல்களை தெரிவித்தார். இதையடுத்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:30 மணிக்கு அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை துவங்கி இன்று அதிகாலை வரை நடந்தது. இரண்டாம் கால பூஜை இரவு 11:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 1:00 மணிக்கு, நான்காம் கால பூஜை இன்று காலை 3:30 மணிக்கு நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், செயல் அலுவலர் சிவசங்கரி, அறங்காவலர்கள் உள்பட பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அதிக கூட்டம் என்பதால் இரண்டு மணி நேரம் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.