பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், சக்தி வாய்ந்த கிராம தேவதை கோவில்கள் இருக்கும். அதே போன்று, மைசூரின் கொத்தனபுரா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஹொளே தேவம்மா கோவில் அமைந்துள்ளது. இது, பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கோவில்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொத்தனபுரா கிராமத்தில், ஹொளே தேவம்மா கோவில் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமையான வயல்கள் சூழ்ந்த, அமைதியான சூழலில், ஆற்றங்கரையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
இத்தகைய கோவிலை பார்ப்பது மிகவும் அபூர்வம். இங்கு வந்தால் மனதில் அமைதி, நிம்மதி ஏற்படுவதை உணரலாம்.
பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது. இங்கு குடிகொண்டுள்ள ஹொளே தேவம்மா மிகவும் சக்தி வாய்ந்தவர். குறிப்பாக குழந்தை வரம் அருள்பவர்.
திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி, இந்த கோவிலுக்கு வந்து வேண்டி கொண்டால், குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
குழந்தையில்லா தம்பதியர், ஹொளே மாரம்மாவுக்கு அரிசி, சேலை, தாலி உட்பட, மங்கள பொருட்களை சமர்ப்பணம் செய்து, வேண்டிக் கொண்டால் போதும், குழந்தை வரம் கிடைக்கும்.
வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், கடன் தொல்லை, குடும்பத்தில் பிரச்னை, பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி என, எந்த பிரச்னைகள் என்றாலும், ஹொளே தேவம்மாவின் காலடியில் சரண் அடைந்தால் போதும். அனைத்தும் சரியாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுதும், ஹொளே தேவம்மா கோவிலில், சிறப்பு பூஜைகள், பஜனைகள் மற்றும் திருவிழா நடக்கும். இதில், மைசூரு, பெங்களூரு உட்பட, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வந்து பங்கேற்பர்.
ஹொளே தேவம்மா கோவில், இயற்கையின் மடியில் அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியரையும் சுண்டி இழுக்கிறது.
குடும்பத்துடன் வந்து இயற்கையை ரசித்து விட்டு அம்பாளையும் தரிசித்து புத்துணர்ச்சியுடன் செல்கின்றனர். கபிலா ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்திருப்பது, மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து, 161 கி.மீ., மாண்டியாவில் இருந்து, 64 கி.மீ., ராம்நகரில் இருந்து, 114 கி.மீ., மைசூரில் இருந்து, 23 கி.மீ., தொலைவில். நஞ்சன்கூடு உள்ளது. நஞ்சன்கூடில் இருந்து ஏழு கி.மீ., தொலைவில், கொத்தனபுரா ஹொளே தேவம்மா கோவில் அமைந்துள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், நஞ்சன்கூடுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், மைசூரின் மண்டகல்லி விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம். சிறிது தொலைவு கால்நடையாக செல்ல வேண்டும்.
தரிசன நேரம்: காலை 7:30 முதல் மாலை 6:00 மணிவரை.
அருகில் உள்ள தலங்கள்: நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர், மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை, பிருந்தாவனம்.