பதிவு செய்த நாள்
30
மார்
2026
12:03
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம், ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சென்னை மாநகரின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 7ம் நுாற்றாண்டில் கடற்கரை ஓரம் இருந்ததாகவும், போர்த்துகீசியர்களின் வருகைக்குப் பின், 16ம் நுாற்றாண்டில் அது சிதைக்கப்பட்டு, பின் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கபாலீஸ்வரர் கோவில், அதன் அருகில் உள்ள குளம், 18ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இக்குளம்,‘சிவ கங்கை தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதை, கபாலி, கடவுள், வேத, வாலி, கங்கை, வெள்ளி மற்றும் ராம தீர்த்தம் என, ஏழு தீர்த்தங்களின் சங்கமமாகப் போற்றப்படுகிறது.
திருஞானசம்பந்தர் தன் பதிகங்களில், மயிலாப்பூர் பூம்பாவையை உயிர்ப்பித்த போது இக்கோவில் மற்றும் அதன் நீர்நிலைகளின் சிறப்புகளைப் பாடியுள்ளார்.
இக்குளம், 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது, சென்னையின் மிகப்பெரிய கோவில் குளங்களில் ஒன்று. இந்த குளம் அமைக்க ஆற்காடு நவாப் முகமது அலி கான் தன் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
அதற்கு நன்றிக் கடனாக, தெப்ப திருவிழாவின் முதல் நாளன்று ஆற்காடு நவாப்பின் பிரதிநிதிகளுக்கு கோவில் தரப்பில் மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது.
குளத்தின் மையப்பகுதியில் அழகிய நீராழி மண்டபம் அமைந்துள்ளது. தெப்பத் திருவிழாவின் போது சுவாமி இந்த மண்டபத்தைச் சுற்றி வலம் வருவார். குளத்தைச் சுற்றி நான்கு புறமும் கருங்கற்களால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
முக்கியமான நிகழ்வுகள்
தெப்பத் திருவிழா
தை மாத பவுர்ணமி அன்று நடைபெறும் தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றது. அப்போது, குளம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின் ஒளியில் ஜொலிக்கும் தெப்பத்தில் கபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் எழுந்தருள்வர்.
மழைநீர் சேகரிப்பு
கடந்த 2000ம் ஆண்டு துவக்கத்தில் இக்குளம் வறண்டு காணப்பட்டது. பின்னர் முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதால், தற்போது ஆண்டு முழுதும் இக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. இது, சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பெரிதும் உதவுகிறது.
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின்போது படித்துறைகளில் பல்லாயிரக்கணக்கான எண்ணெய் தீபம் ஏற்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை பண்டிகையின் போது மழை பெய்து, குளத்து நீரில் எண்ணெய் கலந்து ஏராளமான மீன்கள் இறந்தன. அதன்பின், விளக்கு ஏற்றுவது நிறுத்தப்பட்டது.