பதிவு செய்த நாள்
30
மார்
2026
12:03
கயிலையில் சிவ பெருமானிடம் உமையவள், பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக்குமாறு கேட்டார். அவர் சொல்லத் துவங்கியபோது, தேவியின் பார்வை, அங்கு வந்து தோகை விரித்தாடிய மயிலின் பக்கம் திரும்பியது.
அதைக் கண்ட ஈசன், ‘பஞ்சாட்சர மந்திரத்தில் கவனம் செலுத்தாமல், எந்த மயிலினை கண்டு நீ மயங்கினாயோ அதுவாகவே மாறக்கடவாயாக’ என்று சினத்துடன் சாபமிட்டார்.
பார்வதி தன் தவறுக்கு வருந்தி, கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்ள, தொண்டை மண்டலம் சென்று, அங்குள்ள ஒரு புன்னை மரத்தடியில் மயில் வடிவில் தன்னை வழிபட்டால், சாபம் நீங்கும் என, சிவபெருமான் அருளினார்.
அதன்படி, இத்தலத்தையே கயிலையாக பார்வதி பாவித்து, புன்னை மரத்தடியில் எழுந்தருளிய சிவலிங்கத்தை மயிலுருவில் பூஜித்து அவரோடு இணைந்தார்.
அதன் காரணமாகவே இந்த தலம் திருமயிலை எனப் பெயர் பெற்றது. இத்தலத்தின் அன்னை கற்பகாம்பாள் எனப் பெயர் பெற்றிருக்கிறாள்.
சிவனாரின் கரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்ம கபாலத்தோடு, உருவகப்படுத்தி, ஆதி காலத்தில் கபாலிகர்கள் சிவபெருமானை இத்தலத்தில் வழிபட்டனர்.
எனவே, இங்கு பரிபாலிக்கும் ஈசனுக்கு கபாலி என்று ஒரு பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. சிவலோகத்திற்கும், பூலோகத்திற்கும் உள்ள இந்த பிணைப்பையே, ‘மயிலையே கயிலை’ என, அழைக்கப்படுகிறது.