வெள்ளலூரில் வெற்றிலை பிரி திருவிழா: உழவு பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 11:04
மேலூர்: வெள்ளலூரில் ஆண்டு தோறும் தமிழ் மாத பிறப்பான சித்திரை 1 முன்னிட்டு வெற்றிலை பிரித்துக் கொடுக்கப்பட்டு உழவு பணிகள் துவங்கப்பட்டது.
வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படும் 64 கிராமங்களில் உள்ள 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்கள் தலைமையில் இன்று கிராம மக்கள் மந்தை கருப்பண சுவாமி மற்றும் விநாயகர் கோயில் மந்தையில் ஒன்று கூடினர். கோயில் முன் உள்ள தீக்குண்டத்தில் மக்கள் சாம்பிரானியும், தீர்த்த நீரில் உப்பு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து ஒரு பிரிவினர் தங்கத்தால் ஆன கொழுவை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து தரையில் உழுத பிறகு சுவாமி கும்பிட்டனர். பின்னர் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினை சேர்ந்தவர்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. வெற்றிலையை வாங்கி அம்பலகாரர்கள் அந்தந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு பிரித்து கொடுத்தனர். வெற்றிலையை வாங்கியவர்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்து சுவாமி கும்பிட்ட பிறகு வயலுக்கு சென்று உழவு பணியை வாங்கினர். இதே போல் தும்பைப் பட்டியில் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு அம்பலகாரர்கள் தலைமையில் பஞ்சாங்கம் வசிக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு முஸ்லிம்கள் வெற்றியைப் பிரித்து கொடுத்தனர். ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக இத் திருவிழா கொண்டாடப்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.