பதிவு செய்த நாள்
18
ஜன
2013
10:01
பேரூர்: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இரண்டு நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார். கோவிலில், சைவவேத ஆகமம், திருமுறை சித்தாந்தம், திவ்விய பிரபந்தம் ஆகியவற்றை கற்றுத்தரும் புத்தொளிப்பயிற்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பங்கேற்ற, சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்பட 100 அர்ச்சகர்களுக்கு, சான்றிதழ்களை வழங்கினார். கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றிப்பார்த்த கமிஷனர் கோவில் சன்னதிகளின் மேல்பகுதியில், சாமியின் பெயரை எழுத உத்தரவிட்டார்.மேலும், ராஜகோபுர கதவு அமைக்கும் பணி, தெப்பக்குளம் பகுதிகளை சுற்றி பார்த்தார். தொடர்ந்து, மைதானத்திலுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தவும், மைதானத்தைச் சுற்றி காம்பவுண்டு சுவர் எழுப்பி கேட் அமைக்கவும், சோழன்படித்துறையில் மண்தளமாக உள்ள காரணகாரிய கொட்டகையை சிமென்ட் தளமாக மாற்றவும், கோவில் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். தேங்காய் பழக்கடைக்கு வாடகை நிர்ணயம் செய்து, மூடிக்கிடக்கும் கடைகளை பயன்பாட்டுக்கு திறக்கவும் உத்தரவிட்டார். இறுதியாக, பங்குனி தேரோட்டம் முடிந்ததும், சிவபக்தர்கள் நலச்சங்கத்தினரின் கோரிக்கையான, பேரூர் பட்டீஸ்வரர் தேரை புதுப்பிப்பது தொடர்பாக, கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, உதவிகமிஷனர் புகழேந்திரன், மருதமலை கோவில் துணைஆணையர் குமரதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.