பெ.நா.பாளையம்: பாலமலை ரங்கநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழாவையொட்டி பெருமாள், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு, சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். இன்று செங்கோதை அம்மன் அழைப்பு நடக்கிறது. நிகழ்ச்சியை ஒட்டி நாளை செங்கோதை அம்மன் தாயார் கோயில் வளாகத்தில் அபிஷேக பூஜை, அன்னதானம், நாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் பஜனை கோஷ்டியின் நாம சங்கீர்த்தனம், வீரபாண்டி பிரிவு ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் பஜனை குழுவினரின் ராம சங்கீர்த்தனம், ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் ராம சங்கீர்த்தனம் நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு நாயக்கன்பாளையத்திலிருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, டி.ஜி.,புதூர் சீனிவாச பெருமாள் பஜனை கோஷ்யரின் நாம சங்கீர்த்தனம், பாலமலை ரங்கநாதர் கிருஷ்ண லீலா பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு, 12:30 மணிக்கு பாலமலை மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு தாயாரை அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், மே 1ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 2ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், 3ம் தேதி சேஷ வாகன உற்சவம், தெப்போற்சவம், 4ம் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகள் கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.