பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 11:04
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் நடந்தது.
சங்க இலக்கியத்தில் பாடம் பெற்ற இக்கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப். 21 ல் கொடியேற்றுத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டபடியாக தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து வருகிறது. ஏப். 25ல் திருக்கல்யாணம் நடந்தது. இன்று சித்திரை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3:00மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குன்றநாதர் பெரிய தேரிலும், குயிலமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு காலை 5:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். மாலை 5:40 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் சிவசிவ கோஷம் முழங்கி வழிபட்டனர். வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்டவற்றை கூட்டத்தில் சூரை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.