திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது. உற்சவர் சன்னதியில், விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், அஸ்தரதேவர் எழுந்தருளினர். கார்த்திகை கொடியேற்றம் தொடங்கி நேற்று வரை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால், உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகால பூஜை முடிந்து, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைஅம்மன், சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதியில் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் முடிந்து அஸ்தரதேவருக்கு சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி அருள்பாலித்தார்.