சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அடிப்படை வசதி தேவை: பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2014 03:05
வத்திராயிருப்பு: தமிழகத்தின் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்துக்களின் புண்ணிய ஸ்தலங்களில் முக்கியமானதாக இக்கோயில் கருதப்படுகிறது. புராண காலங்களில் வாழ்ந்த 18 சித்தர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மலையில் வாழ்ந்து வந்தனர். சதுரகிரி மலையில்தான் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இறைவனை வழிபட்டனர். அனைத்து சித்தர்களின் காலடிபட்ட புனித மலையாக உள்ளதால் பக்தர்கள் இதை புண்ணிய பூமியாக கருதுகின்றனர். சித்தர்கள் தினமும் வந்து இங்குள்ள சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்க சுவாமிகளை பூஜை செய்வதாக ஐதீகம். இந்த மலைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி அமாவாசையில் மட்டுமே பக்தர்கள் சென்றனர். ஆனால் தற்போது மாதம் தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை, சனி, ஞாயிறு, விடுமுறைமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இது தவிர தினமும் நூற்றுக்கணக்கானோர் செல்கின்றனர்.
கழிப்பறை: இவ்வளவு அதிகமான பக்தர்கள் வருகை இருந்தும் அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. மிக முக்கியமாக கழிப்பறை வசதி மருந்துக்கு கூட கிடையாது. பெயருக்காக கட்டப் பட்டுள்ள ஒரேயொரு கழிப்பறையிலும் தண்ணீர் இல்லாததால் உபயோகமின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மலைப்பாதைகளின் இருபுறமும் பக்தர்கள் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்தி விடுகின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு ஓட வேண்டியுள்ளது. புனிதமான மலையில் பெரும் சுகாதாரக்கேடான நிலை உள்ளது. பெண்கள் அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கூட வழியின்றி பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். எனவே அங்கு தண்ணீர் வசதியுடன் ஆங்காங்கு கழிப்பறைகள் கட்ட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர்: பெரும்பாலான நாட்களில் மலையில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வறண்டு விடுவதால் கோயில் நிர்வாகம் குழாய்களின்மூலம் சப்ளை செய்யும் நீரையே பக்தர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால் இது பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. பெரும் தட்டுப்பாடாக உள்ளதால் விஷேச நாட்களில் மொட்டைபோடும் பக்தர்கள் குளிப்பதற்குக்கூட நீர் இன்றி, மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி "காக்காய் குளியல் போட்டுத்தான் தரிசனம் செய்ய செல்கின்றனர். திருவிழா நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக உள்ளது. எனவே தற்போதுள்ள நீர் ஆதாரம் தவிர, மேலும் பல இடங்களில் போர்வெல் போட்டு நீர்ஆதாரங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு இரவில் தங்கி மறுநாள் காலையில் சிவனை தரிசனம் செய்வதையே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் பக்தர்கள் தங்குவதற்கு போதிய வசதியில்லை. இங்குள்ள ஷெட்டுகள் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், திருவிழா தவிர மற்ற நாட்களில் இந்த ஷெட்டுக்கள் பூட்டி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு உபயோகமில்லாமல் உள்ளது. எனவே தனியார் வசம் உள்ள ஷெட்டுக்களைஅரசு கையகப்படுத்தி அதை பக்தர்களுக்கு பயன்படும் வகையில் வழிசெய்ய வேண்டும். அப்படியே ஷெட் போடப்பட்டிருந்தாலும், மழைக்கும் வெயிலுக்கும் பக்தர்களை பாதிக்கும் அளவிற்கு ஷெட்டின் உயரம் மிக குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஷெட்டின் உயரம் குறைந்தது 7 அடியாவது அமைக்க அனுமதிக்க வேண்டும். இங்கு குளிக்கும் பெண்களுக்கு உடைமாற்றும் அறைகள் கட்ட வேண்டும்.
அன்னதானம்:சதுரகிரியைப்பொறுத்தவரை அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கூட்ட நேரங்களில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடபோதிய வசதிகள் இல்லை. எனவே அரசே பெரிய அன்னதானக்கூடங்களை கட்டித்தரலாம். அல்லது அன்னதானம் போடும் தனியாருக்கு அன்னதான கூடம் அமைக்க அனுமதி தரலாம்.
மருத்துவ முகாம்: திருவிழா காலத்தில் அசம்பாவிதமாக விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்ய மருத்துவ முகாம் தேவை.
சபாஷ்: மலைப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து கடை போடப்பட்டதை அகற்றி பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்து, அவர்களின் பாராட்டை பெற்ற அறநிலையத்துறை அதிகாரிகள், அதேபாணியில் மேற்கண்ட குறைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து பக்தர்களை அவஸ்தைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே சதுரகிரி பக்தர்களின் ஒருமித்த கோரிக்கை.