காரைக்கால் : காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதைத் தெளி உற்சவம் நடந்தது. காரைக்கால் தலத்தெரு பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என வழங்கப்பட்டு வந்துள்ளது. மழையின்றி பூமி வறண்டு கிடந்த நிலையில், சிவபெருமான் உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்ததால், மழை பெய்து, விவசாயம் பெருகியதாக ஐதீகம்.அந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக, காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில், ஆண்டுதோறும் விதைத் தெளி ஊற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோவிலில் விதைத் தெளி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. காலை 9:௦௦ மணிக்கு ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமம் நடந்தது.நேற்று காலை சிவலோகநாதர் விஸ்வரூப தரிசனமும், விதைத் தெளி உற்சவமும் நடந்தது. சிவபெருமான் உழவு கலப்பை கையில் ஏந்தி, சிவகாமி அம்பாளுடன் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிலின் எதிரே உள்ள நிலத்தில் விதைத் தெளித்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.