பதிவு செய்த நாள்
11
ஆக
2014
11:08
கும்மிடிப்பூண்டி : சிறுவாபுரியில் நடைபெற்ற, வள்ளி மணவாள பெருமான் கல்யாண மகோற்சவத்தில் திருமண வரம் வேண்டி, ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்று, முருகனை வழிபட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே, சின்னம்பேடு கிராமத்தில் உள்ளது சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். திருமண தடை நீக்கும் ஸ்தலம் என்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.இக் கோவிலில், சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், நேற்று, ஐந்தாம் ஆண்டு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்றது.அதிகாலை முதலே திருமணம் ஆகாத ஆண், பெண் தங்கள் பெற்றோர்களுடன் கோவில் முன் கூடியிருந்தனர். கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த பந்தலில், அவர்களுக்கான மாலை, விவரங்கள் நிரப்ப வேண்டிய குறிப்புகள், ஆன்மிக புத்தகங்கள் அடங்கிய பைல் மற்றும் தண்ணீர், கூல் டிரிங்கஸ் ஆகியவை குழுவினர் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. திருமண வரன் வேண்டி, திருமணம் ஆகாத ஆண், பெண் என, 1,000க்கும் மேற்பட்டோர், தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து, சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிலின் செயல் அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையிலான அர்ச்சகர்கள், திருமண வைபவத்தை நடத்தினர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :