செஞ்சி: செஞ்சி அருகே, பழங்கால சமண சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, கல்லடிகுப்பம் கிராமத்தில் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி வரலாற்றுத்துறை தலைவர் ரமேஷ் தலைமையில், சமண அகிம்சை நடைபயண அமைப்பாளர் ஸ்ரீதரன், குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள, பாப்பாத்தி பாறையில் கிழக்கு நோக்கி மூன்று அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ள பார்சுவநாதர் தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பத்தை கண்டு பிடித்தனர். இது குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், செஞ்சி பகுதியில் ஏராளமான சமண தடங்கள் உள்ளன. இங்குள்ள புடைப்பு சிற்பம் 15ம் நுாற்றாண்டை சேர்ந் ததாக உள்ளது. சிற்பத்தில் பார்சுவநாதர் தீர்தங்கரர் நின்ற நிலையில், இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தொங்க விட்டுள்ளார். பார்சுவநாதரின் தலையில் ஐந்து தலை நாகமும், அதற்கு மேல் முக்குடையும், பக்கவாட்டில் இருசாமரம் மற்றும் கீழே இரு பக்கமும் விளக்குகளும் உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் பழங்காலத்தில் சமணர்கள் வாழ்ந்து வந்தது தெரிய வருகிறது என்றார்.