பதிவு செய்த நாள்
04
பிப்
2015
12:02
ஒவ்வொரு வருடமும் ஈஷா யோக மையத்தில், லிங்கபைரவி உதயமான தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பெண்களுக்கான சிவாங்கா சாதனா என, 21-நாள் விரதத்தை சத்குரு வழங்கினார். 21 நாள் விரதம் இருந்து, தேவியின் அருளைப் பெறுவதற்கு இவர்கள் பிப்ரவரி 3ம் தேதி ஈஷா யோக மையம் வந்தனர்.
பாதயாத்திரை: இதில் சிலர் லிங்கபைரவியை தரிசிக்க பாதயாத்திரையாய் மேட்டூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து ஈஷா யோகா மையம் வந்தடைந்தனர். ஆலந்துரையில் இருந்து மட்டுமே 150 பெண்கள், முளைப்பாரி எடுத்துக் கொண்டு வந்தனர். முளைப்பாரியிலேயே லிங்கபைரவியின் உருவத்தை வடிவமைத்து அதை தேரில் வைத்து ஈஷா யோகா மையம் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரதம் முடிவுபெறுகிறது: விரதத்தை முடித்துக் கொள்ள வந்த பெண்கள், தேவிக்கு தானியம் மற்றும் தேங்காய் அர்ப்பணித்தனர். அவர்களுக்கான மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளும் நடந்தது போல், இம்முறையும் சத்குருவுடன் சத்சங்கம், மதியம் 2 மணியளவில் நடைபெற்றது.
சிவாங்கா விரதம் குறித்து சத்குரு பேசுகையில், "சிவாங்கா என்றால் சிவனின் அங்கம் என்று பொருள். நாம் இப்போது துவங்கியிருக்கும் சிவாங்கா சாதனா என்பது, படைப்பின் அங்கமாக இருப்பதிலிருந்து படைத்தவனின் அங்கமாக இருப்பதை நோக்கி முன்னேறும் பயணமாகும். படைப்பின் மூலம் மனிதர்களுக்குள் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிருகளுக்கு மூலமும் ஒன்றுதான், ஆனால் மனிதர்களான நம்மால்தான் அதை அனுபவத்தில் உணரமுடியும்.
இதுதான் நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியமும், சவாலும், வாய்ப்பும் ஆகும். நம்மால் இப்பயணத்தை ஒரு விழிப்புணர்வான செயல்முறையாகச் செய்யமுடியும். வேறெந்த உயிரனத்தாலும் இப்படிச் செய்யமுடியாது. மற்ற உயிரினங்களுக்கும் இதே மூலப்பொருள் இருந்தாலும், அவற்றால் இதை உணர்ந்துகொள்ள முடிவதில்லை. உங்கள் நெஞ்சில் பக்தி நெருப்பை ஏற்றினால், இங்கே பூமியின் ஒரு பகுதியாக வாழமாட்டீர்கள்; சிவனின் ஒரு அங்கமாக, பாகமாக வாழ்வீர்கள்." என்றார்.
ஈஷா யோக மையத்தில் வேலை பார்க்கும் பெண் சேவாதார்களுக்கும் அன்று மதிய உணவும், ஒரு புடவையும், அவர்களின் சேவைகளுக்கு நன்றி வெளிப்படுத்தும் வண்ணம் வழங்கப்பட்டது.
பௌர்ணமி பூஜை: தைப்பூசத் திருநாள் பௌர்ணமியும் என்பதால், தேவியின் ஊர்வலமும், மஹா அரத்தியும் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தேவியின் அருளைப் பெற்றனர்.