பதிவு செய்த நாள்
26
மார்
2015
12:03
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று முதல், பங்குனி திருவிழா துவங்கி, வரும், ஏப்., ௬ம் தேதி வரை நடக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பெருந்திருவிழா நடக்கும். இந்த ஆண்டுக்கான பெருந்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று, அதிகாலை 5:40 மணிக்கு, கொடியேற்றமும் அதை தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு, பவழக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் வீதியுலாவும், நடக்கின்றன. இன்று இரவு, கற்பகாம்பாள், மயில் வடிவில், இறைவனை வழிபட்ட காட்சி நடைபெறுகிறது. அதையடுத்து, புன்னை மர வாகனத்தில் கபாலீஸ்வரரும், கற்பக மர வாகனத்தில் கற்பகாம்பாளும், வேங்கை மர வாகனத்தில் சிங்காரவேலரும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு, கோலவிழி அம்மன் கோவிலில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று இரவு, விநாயகர் உற்சவத்தை முன்னிட்டு, வெள்ளி மூஷிக வாகனத்தில், விநாயகர் வீதியுலா நடந்தது.
இதுதான் மயிலை...:
1. மயிலாப்பூர் என்ற பெயரே, மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர் = மயிலாப்பூர்; மயில்கள் நிறைந்த இடம் என்று பொருள். மயூரபுரி, மயூரநகரி என்ற பெயர்களும் உண்டு.
2. உமையவள், மயிலாக வந்து, இங்கு ஈசனை வழிபட்டதால் மயிலை என்றும், சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை, மகாவிஷ்ணு மீட்டு வந்ததால் வேதபுரி என்றும், சுக்கிராசாரியார், கபாலீஸ்வரரை வழிபட்டு அருள் பெற்றதால் சுக்கிரபுரி என்றும், காபாலிகர்கள் வழிபட்டதால் கபாலீச்சரம் என்றும் மயிலாப்பூர் அழைக்கப்பட்டிருக்கிறது.
3.அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான வாயிலார் நாயனார், சிவநேசச் செட்டியார், பூம்பாவை வாழ்ந்த தலம் மயிலாப்பூர்
4.கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள பெரிய தெப்பக் குளம், தலபுராணத்தில், கபாலி தீர்த்தம் என, அழைக்கப்படுகிறது.
5.இந்த தலத்து முருகன், சிங்காரவேலர் என, போற்றப்படுகிறார். அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இவர். பொன்பூத்த கமலமலர்ப் புத்தேளும் பூவைவண்ணப் புனிதனாதி தென்பூத்த கடவுளரும் சதுர்மறையும் பரவஅருள் திமில்ஏற்று அண்ணல் கொண்பூத்த மயிலைநகர்ப் பூம்பாவை ஈசன்எனும் குழகன்ஞான மின்பூத்த திருவடித் தாமரையைஅன்பின் வணங்கி என்றும் வியந்துவாழ்வாம்
கொங்குலா மலர்க்குழலும் பிறைநுதலும் கயல்விழியும் குமுதவாயும் சங்கமா மணிமிடறும் கழைப்புயமும் மலர்க்கரமும் தரள மாலைத் துங்கமா கிரிமுலையும் கொடியிடையும்
பதுமஅடித் துணையும்உள்ள எங்கள் நாயகியை எழில்மயிலையில் கற்பகக்கொடியை இறைஞ்சி வாழ்வாம்
அமிர்தலிங்க தம்பிரான் இயற்றிய திருமயிலைத் தலபுராணம்.
இன்றைய விழா
* அதிகாலை 5:00 மணி கொடியேற்று மண்டபத்தில், இறைவன் எழுந்தருளல்
* அதிகாலை 5:40 மணி கொடியேற்றம்
* காலை 6:00 மணி பவழக்கால் விமானம்
* இரவு 10:00 அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சி; புன்னை, கற்பகம், வேங்கை மர வாகனங்களில் வீதியுலா