பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
12:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் நேற்று, சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி முடிந்து, வெள்ளி இடப வாகனத்தில் திரிபுர சுந்தரி அம்பாளுடன், சந்திரசேகர் எழுந்தருளினார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண திரு விழாவின் கடைசி உற்சவமான தீர்த்தவாரி, நேற்று மதியம், 1:30 மணியளவில், சர்வ தீர்த்த குளத்தில் நடந்தது. பின், வெள்ளி இடப வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுடன், சந்திரசேகர் எழுந்தருளி கோவிலுக்கு சென்றார்.முன்னதாக நேற்று முன்தினம், பஞ்ச மூர்த்திகள் உற்சவம் நடந்தது. இதில், ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி, விநாயகர், சண்டிகேஸ்வரர், முருகன் ஆகியோர் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.