பெண்களுக்கு நபிகள் நாயகம் வழங்கியுள்ள அறிவுரையைக் கேளுங்கள். தலையில் முக்காடு இல்லாமல், உடலை மறைத்துக்கொள்ளாமல், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் ஷைத்தானின் முகத்தைக் கொண்டு செல்கிறாள். அவள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது ஷைத்தானின் முகத்தைக் கொண்டு வருகிறாள். மெல்லிய ஆடை அணிந்த பெண்ணே! உன்னை முழுமையாக்கிக் கொள்! நிர்வாணமாக நடக்காதே. ஒரு மனைவிக்குரிய செல்வத்தை எல்லாம் அவள் கணவன் செலவு செய்து அழித்து விடுவானாயின் அதற்காக அவள் தன் கணவனைப் பார்த்து, என் செல்வத்தை எல்லாம் அழித்துவிட்டாயே, என்று கடிந்து கொள்வாளேயானால், அவள் நாற்பது ஆண்டு காலம் செய்த நன்மைகள் அழிக்கப்பட்டு விடும். ஐங்காலமும் தொழுது, ரமலான் மாதம் நோன்பும் நோற்று, தன்னை எந்த கெட்ட செயலிலும் ஈடுபடுத்தாமல், கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண், அவள் விரும்புகிற சொர்க்கத்தில் நுழைவாள். உங்களில் ஒருவருக்கொருவர் காலில் விழுந்து தலைவணங்க (ஸஜதா) செய்ய ஏவி இருந்தால், மனைவி கணவனுக்கு தலைவணங்க ஏவி இருப்பேன். அதற்கு இடமில்லை. இறைவனுக்கு மட்டுமே தலை வணங்க வேண்டும். வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால் அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி வேதனைப்படுத்தும் பெண் தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும் கூட நரகத்திற்கே செல்வாள். அதே நேரம் தொழாத, தர்மம் செய்யாத, நோன்பு நோற்காதவளாக இருந்தாலும், ஒரு பெண் பக்கத்து வீட்டாருடன் அன்பு கொண்டிருந்தால் அவள் சொர்க்கம் நுழைவாள்.