பணியாளர்களை வேலை வாங்க வேண்டியது தான். அதற்காக, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் பிரச்னை வரும் என்பதை ஒரு நிகழ்ச்சி மூலம் அறியலாம். ஒரு கிராமத்தில் பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வெங்கடபட்டர் என்பவர் பூஜை பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். வேலை செய்த களைப்பு வாட்டவே, சற்று ஓய்வெடுத்தார். அப்போது, அவ்வூர் கிராம அதிகாரி பட்டரிடம், என்னப்பா! சும்மா நிக்கிறே... சந்தனத்தை அரை... என்று அதிகார தொனியுடன் கட்டளையிட்டார். அவ்வளவு நேரமும், சிறப்பாக பணி செய்த தன்னை இளக்காரமாக பேசிய அதிகாரி மீது, பட்டருக்கு கோபம் வந்து விட்டது. அக்னி சூக்தம் என்னும் மந்திரம் ஜெபித்தபடி சந்தனத்தை அரைத்துக் கொடுத்தார். பூஜை முடிந்ததும், அதை எல்லாரும் பூசினர். அவ்வளவு தான்.. உடம்பில் தீப்பட்டது போல துடித்தனர். விஷயம் அறிந்த கிராம அதிகாரி பட்டரிடம் வந்து, ஐயா! தாங்கள் தானே சந்தனம் அரைத்தீர்கள். தங்கள் மகத்துவம் தெரியாமல் நடந்த என்னை மன்னியுங்கள், என்று வேண்டினார். இரக்கப்பட்ட வெங்கடபட்டர், வருண சூக்த மந்திரம் சொல்ல, சந்தனம் பூசியவர்களின் உடம்பில் குளிர்ச்சி பரவியது. இந்த வெங்கடபட்டர் தான், பிற்காலத்தில் மந்திராலாய மகான் ராகவேந்திரர் என போற்றப்பட்டார்.