ஒரு முறை வணங்கினால் கோடிமுறை அருள் தரும் கோடீஸ்வரர் கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூரில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஒருமுறை தானம் செய்தால் நம் செல்வம் கோடி கோடியாய் பெருகும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு: இமயமலைச்சாரலில் பத்திரயோகி என்ற முனிவர் தவம் செய்தார். திரிகர்த்த தேசத்து அரசன் மகன் சத்தியாதி என்பவன் வேட்டையாடி களைத்து முனிவர் இருக்கும் இடம் வந்தான். கண்கள் விழித்திருந்தாலும் தவத்தில் மூழ்கி போயிருந்ததால் அவர் அரசிளங்குமரன் வந்ததை கவனிக்கவில்லை. விழித்துக்கொண்டே தன்னை அவமதித்ததாக இளவரசன் கருதினான். எனவே ஒரு பிணத்தை சிதைத்து அந்த சிதைவுகளை முனிவர் முன் குவித்துவிட்டு போய்விட்டான். நிஷ்டை கலைந்த முனிவர் அரண்மனைக்கு சென்று அரசனை சபித்தார். அரசிளங்குமரன் பிசாசாக மாறினான். கோபத்தில் சாபம் கொடுத்ததால் முனிவருக்கும் தவ வலிமை போய்விட்டது. சிவபெருமான் அவரிடம், கோடி தலங்களுக்கு சென்று வழிபட்டால்தான் சாபம் நீங்கும் என கூறிவிட்டார். இதன்பின் முனிவர் பலதலங்களுக்கும் சென்றார். இறுதியாக கொட்டையூரை அடைந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. முனிவனே! இனியும் நீ யாத்திரையை தொடர வேண்டாம். இந்த தலத்தில் நான் கோடிலிங்கமாக இருக்கிறேன். என்னை வழிபட்டால் கோடி தலங்களை வழிபட்டதற்கு சமம் என்றது. இதே சமயத்தில் பிசாசாக மாறிய இளவரசனும் இத்தலத்திற்கு வந்து சேர்ந்தான். முனிவரும் இளவரசரும் இத்தலத்தில் உறையும் கோடீஸ்வரரையும் அம்பாள் பந்தாடு நாயகியையும் வழிபட்டனர். இத்தலத்தில் உள்ள அமுதக்கிணற்றின் தீர்த்தத்தை பிசாசாக மாறிய மகனின் தலையில் தெளித்தான் அரசன். பிசாசு உருவம் மாறியது. முகம் பொலிவாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் இத்தலத்து தீர்த்தத்தை தலையில் தெளித்துசெல்கிறார்கள்.
அம்பாள் மகிமை: பத்திரயோக முனிவர் இத்தலத்தில் தங்கியிருந்தபோது ஒரு பெண் பந்தாடிக்கொண்டே வந்தாள். அவளை யார் என முனிவர் விசாரித்தார். அந்தப்பெண் சிலையாக மாறிவிட்டாள். வந்தது உமையம்மை என்பதை அறிந்தஅவர் பந்தாடி வந்த அம்பிகையை பந்தாடு நாயகி என பெயரிட்டு அழைத்தார்.
சிறப்பம்சம்: இத்தலத்தில் உள்ள ஐந்து மூர்த்திகளையும் காண்பவர்கள் கோடி லிங்கங்களை கண்ட பலனைபெறுவார்கள். இங்கு செய்யும் தான தர்மம் மற்ற தலங்களில் செய்வதைவிட கோடிமடங்கு பயன்பெறும். அதே போல இத்தலத்தில் செய்யப்படும் பாவமும் கோடி மடங்காக பெருகி விமோசனமே இல்லாமல் ஆகிவிடும். இதைத்தான் கொட்டையூரில் செய்த பாவம் கட்டையோடு என்று சொல்வார்கள்.
விழாக்கள்: மகாமகத்தன்று இங்கிருந்து கோடீஸ்வரரும் பந்தாடு நாயகியும் மகாமக குளத்திற்கு எழுந்தருள்கிறார்கள். குபேர மூலையில் இருந்து தீர்த்தம் தருகிறார்கள்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் 4வது கி.மீட்டரில் பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது.