பதிவு செய்த நாள்
20
பிப்
2016
12:02
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழாவில் மயான பூஜை பிப்., 21 நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கொங்கு நாட்டு மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஆனைமலை மாசாணியம்மன், உப்பாற்றங்கரையில், சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் வரும் அமாவாசையில், கொடியேற்றப்படுகிறது. கொடி ஏற்றிய 14ம் நாள் இரவு ஊர்வலமாக மயான கரைக்குச்சென்று, மயான மண்ணினால், அம்மனின் உருவச்சிலை செய்து, அதற்கு சக்தி பூஜை செய்யப்படுவது வழக்கம்.
இந்தாண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை நள்ளிரவு, 1:00 மணிக்கு மயான பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில், மண்ணை சமப்படுத்தும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அங்கு பாறைத்துகள் போடப்பட்டு, பக்தர்கள் அமருவதற்கு ஏற்ற வகையில், தரைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அமரும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்க, தடுப்பு கம்புகள் அமைக்கப்படுகின்றன. ஆனைமலை பேரூராட்சித்தலைவர் சாந்தலிங்ககுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பணிகளை பார்வையிட்டனர்.