புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் மாசிமாத ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருத்தேர் உலா நடந்தது. உற்சவத்தையொட்டி அன்றையதினம் இரவு 7:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் கோவிலைச் சுற்றி வலம் வந்து அருள்பாலித்தார். பின்னர் 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.