பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா, கடந்த 7ம் தேதி, மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் நாள் விழாவாக, நேற்று மாலை, வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மனுடன், காப்பு கட்டிய பக்தர்கள் அக்கினி குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். கோவில் முன் அமைத்திருந்த தீக்குண்டத்தில், சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம், முதலில் தீக்குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோவில் மேலாளர் முனியப்பன் மற்றும் கோவில் பூசாரிகள், பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.
சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து தீக்குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று காலையில் இருந்து, இரவு 9.30 மணி வரை, நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். முன்னதாக, அக்னி குளத்தில் இருந்து, ஊர்வலம் வந்தபோது, பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு லாரிகளில் தொங்கியும், லாரிகளை இழுத்தும் வந்தனர். தீமிதி நடந்தபோது, செடல் குத்திய பக்தர்கள் பறவை காவடி மூலம் ஆகாய மார்க்கமாக அம்மனுக்கு மாலை அணிவித்து, தீபாராதனை செய்தனர். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் நாகபூஷணி, பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சேகர் மற்றும் அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழுப் புரம் எஸ்.பி., நரேந்திரன் நாயர், செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசாரும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்த் திருவிழா மேல்மலையனுார் கோவி லின் முக்கிய திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நாளை (13ம் தேதி) மாலை 3:00 மணிக்கு மேல் நடக்க உள்ளது.