அழகர்கோவில்: முருக பக்தர்கள் சபை உபயதாரர்கள் மூலம் ரூ.1.75 கோடி மதிப்பிலான வைர கிரீடம் சோலைமலை முருகனுக்கு அணிவிக்கப்பட்டது. அழகர்கோவில் மலை மீது உள்ள இக்கோயில் சுவாமிக்கு ஏற்கனவே ரூ.30 லட்சத்தில் வைர வேலும், ரூ.1.37 கோடி மதிப்பில் தங்கத்தேரும் செய்யப்பட்டன. அதைதொடர்ந்து வைர கிரீடம் செய்ய முருக பக்தர்கள் சபையினர் முன் வந்தனர். இதற்கு தேவையான 150 காரட் வைரக்கற்கள், ஒரு கிலோ தங்கத்தில் பணிகள் துவங்கின.பணிகள் முடிந்த பின், கிரீடத்தை அறுபடை வீடு கோயில்களுக்கும் எடுத்துச்சென்று பூஜித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் முன் வைக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டன. பின் தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரையிடம் கிரீடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் தான் முழுமையான வைர கிரீடம் உள்ளது. தற்போது சோலைமலை முருகனுக்கு முற்றிலும் வைரக்கற்கள் பதித்த கிரீடத்தை உபயதாரர்கள் வழங்கி உள்ளனர் என்றனர்.